லக்னோ:

உத்தரப்பிரதேசம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் நேற்றிரவு துல்கான் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற கடையில் சாராயம் குடித்தனர். அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் நிலைமை மோசமான 4 பேர் நேற்றிரவு உயிரிழந்தனர்.

உடனடியாக மற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு 5 பேர் அடுத்தடுத்து பலியாகினர். மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மது வியாபாரியும், ஒப்பந்ததாரரும் தலை மறைவாகிவிட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து கடையில் இருந்த சாராயத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.