கொழும்பு:

ல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 21ந்தேதி கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், தற்போது 9 மீனவர்களை கைது செய்துள்ளது.

மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை  இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் வலைகளை அறுத்து எறிவதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்,  ராமநாத புரம்  மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், கருப்பையா, காளியப்பன், இராமகிருஷ்ணா, ரங்கதுரை, தனுஷ்கோடியான்,கணேசன் உள்பட 9 மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை யினர், அவர்களை எல்லை  தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களையும் அவர்களின் 2 நாட்டு படகையும்  சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள  காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.