சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிகபட்சமாக 97 பேர் இன்று பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா வேகம் சற்றே தணிந்து காணப்படுகிறது.
ஆனால், தலைநகரை தவிர்த்து பிற  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இந் நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,794 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 84,916 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். 12,765 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் பலி எண்ணிக்கையும் இன்று உச்சத்தில் இருக்கிறது. இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.