சென்னை: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும், அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் விதிஎண் 110ன்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி,

அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்துவதாக அறிவித்ததுடன்,  2021ஆம் ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு நடத்தப்படாது, அவர்கள் தேர்வின்றி  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என்றார்.

இதுதொடர்பாக இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ”2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகப் பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும்”.

இவ்வாறு அறிவித்தார்.