விழுப்புரம்:
முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவியை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கொடூரம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம்  திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச்சேர்ந்தவர் ஜெயபால் தம்பதி.   சம்பவத்தன்று,  இவர்கள் வீட்டில் இல்லாதபோது, அவரது மகள்  10ம் வகுப்பு  படிக்கும் மகளான ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, திடீரென வீட்டில் இருந்து தீப்புகை வெளியாகி உள்ளது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து,வீட்டிற்குள் சென்று, தீயில் எரிந்துகொண்டிருந்த மாணவியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிறுமியின் பெற்றோர்
இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும்  சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் வாக்குமூலம் பெற்றார். அப்போது,  தன்னை கட்டிப்போட்டு முருகன், கலிய பெருமாள் ஆகிய இரண்டு பேரும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக கூறினார்.
இந்த நிலையில், அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையத்து,  முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் அதிமுகவினர் என்பதும், ஒருவர் முன்னாள் கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத் திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மாணவியின் சித்தப்பா, ஏற்கனவே வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்புக்கும் மோதல் அடிக்கடி நடந்துவந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூறிய சிறுமியின் பெற்றோர், தங்களுக்குள் ஏற்கெனவே முன்பகை இருந்து வந்ததாகவும், ஏற்கனவே அவர்கள் எனது மகனை தாக்கினர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன். அதற்குள்  யாரும் இல்லாத சமயத்தில் என் மகளை இவ்வாறு செய்துவிட்டார்கள் என்று கதறி அழுதார்.