டில்லி:

நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் ஒருவன் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அர்ஜுன் கோபால் என்ற சிறுவனும், அவனது தந்தையும் வக்கீலுமான கோபால் ஷங்கரநாராயணன் மூலம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளான். அதில் நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் வெடித்தல் ஆகியவற்றுக்கு தடை கோரப்பட்டுள்ளது. இதில் விவசாய நிலங்களில் சுள்ளி உள்ளிட்ட விவசாய உபரிப்பொருட்களை எரிப்பதற்கான தடையும் அடங்கும்.

இந்த வழக்கானது நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காற்று மாசு ஏற்படுவதால் பட்டாசுகளைத் தடை செய்யக் கோரும் இதே போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முன்பும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.