சென்னை:

கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்களையே  காப்பாறற முடியாத அரசு நோயாளிகளை எப்படி காப்பாற்றும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் கொரோனா வால் இறந்த மருத்துவரின் உடலை புதைக்கக்கூட அநத பகுதி மக்கள் தடுத்து தாக்குதல் நடத்தியது பெரும் வேதனையை கொடுத்தது.

இதையடுத்து,  மருத்துவர்களை பாதுக்காக்கக் கோரி, மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் மருத்துவர்களின் சார்பில் இன்று இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது.  அதையடுத்து,   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சங்கத்துடன் உரையாடினர். அதேபோல் தமிழகத்தில் எடப்பாடியும் மருத்துவர்களிடம் உரையாடினர். இதனையடுத்து   இந்திய மருத்துவ சங்க போராட்டத்தை வாபஸ் பெற்றது.

இந்த நிலையில், திமுக தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தமிழகஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அதில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி இன்று காலையில் போராட்டம் நடத்திய செய்தி கொரோனாவை விடக் கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்குக் கூட போதிய வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது? இது மக்களைக் காக்கும் அரசா?

அரசியல் செய்யத் தினமும் பேட்டி கொடுத்தால் போதுமா? – பொய்களைச் சொன்னால் போதுமா? தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?

சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாகக் கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது!

சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை!

தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது?

இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.