டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினசரி பல நோயாளிகள் மரணத்தை தழுவி வருகின்றனர்.  தேவையான அளவு ஆக்சிஜனை  பெறுவதில் அங்கு சிக்கல் எழுந்துள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கான மோதல் போக்கு, ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளுடன் மாநில அரசின் மோதல் போக்கு காரணமாக, அங்கு  ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  டெல்லிக்கு  590 மெட்ரிக் டன் ஆக்சினை ஒதுக்க உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.  ஆனால், நீதிமன்றம் கூறியபடி அங்கு ஆக்சிஜன் அனுப்பப்படவில்லை. இதுகுறித்து கூறிய மாநில துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா, நேற்று, டெல்லியில் 440 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்தது, இது ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட குறைவாக உள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால் எங்களுக்கு தினமும் 976 மெட்ரிக் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள  மருத்துவமனைகள் மற்றும் கோவிட் வசதிகளுக்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆக்ஸிஜன் பொருட்களின் நிர்வாகத்தை டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயுதப் படைகளிடம்  ஒப்படைக்குமாறு கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.