சென்னை: நோயாளிகள் மருத்துவமனையில் சேர கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது  அலை அதி தீவிரமாக இருக்கிறது. தினசரி பாதிப்பு  4 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பது தொடர்பான, திருத்தப்பட்ட நெறிமுறைகளை  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

எக்காரணத்தைக் கொண்டும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது.

மருத்துவமனைகளில் ஆஜ்சிஜன், மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல், வழங்கப்பட வேண்டும்.

மருந்துகள் வழங்குவதிலும், சிகிச்சை அளிப்பதிலும், எந்தப் பாரபட்சமும் பார்க்கக் கூடாது

மிக முக்கியமாக நோயாளிகளிடம் கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் கேட்டு வற்புறுத்தக் கூடாது.

கொரோனா லேசான அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்க வேண்டும்,

சரியான அடையாள அட்டை இல்லை என்ற காரணத்திற்காக எந்த நோயாளிக்கும் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்படக்கூடாது.

மருத்துவமனையில் அனுமதிப்பது தேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.