வீட்டு பத்திரப் பதிவுக்காக லஞ்சம் பெற்றதாக சென்னையை சேர்ந்த சார்பதிவாளர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் முத்துக்கண்ணன். சமீபத்தில், வீட்டு பத்திரப் பதிவு ஒன்றுக்காக சார்பதிவாளர் முத்துக்கண்ணன்  40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் வந்தது. புகார் வந்ததை தொடர்ந்து, மயிலாப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், மருத்துவர் ஒருவரிடம் இருந்து முத்துக்கண்ணன் பணத்தை வாங்கும் போது, கையும் களவுமாக ‌லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்யப்பட்டார். லஞ்சம் பெற்றுத்தர இடைத்தரகராக செயல்பட்ட பிரபுல்லா சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துக்கண்ணன் கைதை தொடர்ந்து, கொரட்டூர், சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சோதனையில், லஞ்ச ஊழல் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் டி.எஸ்.பி குமரகுருபரன் தலைமையில் ஆறு ஆய்வாளர்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அதில், கணக்கில் வராத சுமார் 6.30 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது.