சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் பிரபலமான எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மால் உள்ளது. கடந்த 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு நவீன் என்ற 10 வயது சிறுவன் 2வது மாடியில் இருந்து எஸ்கலேட்டரில் (நகரும் படிகட்டு) சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது பை எஸ்கலேட்டரில் சிக்கி கொண்டது. இதில் தடுமாறிய நவீன் தரையில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

உடன் இருந்த பெற்றோர் நவீனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நவீன் இன்று இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ள தவறிய மால் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் தெரிவித்தனர்.

போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இது முழுக்க முழுக்க ஒரு விபத்து. ஆயிரகணக்கான மக்கள் தினமும் எஸ்கலேட்டரை பயன்படுத்துகின்றனர். இதற்காக மால் நிர்வாகம் மீது குற்றம்சுமத்த முடியாது. எஸ்க்லேட்டரில் செல்லும் போது பெற்றோர் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.