டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை  25ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளிலும் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.  இந்த வைரஸ் பரவலை  தடுக்கும் நோக்கில் பல நாடுகள் மீண்டும் லாக்டவுன்களை கொண்டு வந்துள்ளன.  இங்கிலாந்துடனான விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில்  இந்திய  வந்தவர்களுக்கும்த கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் ரத்த மாதிரிகள், உயர்தர ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உருமாறிய கொரோனா தொற்று குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில், 25 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. நேற்று வரை உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டோர் 20 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது.