டெல்லி:

மத்திய அரசின் 34 திட்டங்களின் பயன்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மதிய உணவு திட்டம் முதல் அனைவருக்கும் கல்வி திட்டம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. வரும் ஜூன் 30ம் தேதி வரை பயோ மெட்ரிக் ஆவணம் இல்லாதவர்கள் எவ்வித சிரமமும் இன்றி ஆதார் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘5 முதல் 18 வது வரையிலான குழந்தைகளில் 75 சதவீதம் பேர் ஆதார் பெற்றுவிட்டனர். இந்தியாவில் வாழும் பெரியர்கவர்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் பெறாத குழந்தைகள் பள்ளியிலேயே இந்த காலக்கெடுவிற்குள் சேர்க்கப்படுவார்கள். அதனால் எந்த குழந்தையும் மதிய உணவு திட்டத்தில் இருந்து விடுபட வாய்ப்பு இருக்காது. ஆதார் பெற அவர்கள் அ¬லைய வேண்டிய நிலையும் இருக்காது. இதே போன்று தான் இதர திட்டங்களின் நிலையும் இருக்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.

நேரடி மானியம் பரிமாற்றம் செய்யும் 84 திட்டங்களுக்கும் ஆதார் விரைவில் கட்டாயமாக்கப்படும். ஆதார் இல்லாதவர்கள் வரும் ஜூன் 30ம் தேதி வரை இதர ஆவணங்களை சமர்ப்பித்து பயனடையலாம். மதிய உணவு திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள் மற்றும் திறன் பயிற்சி திட்டமான தீனதயாள் அந்தியோதியா யோஜனா உள்ளிட்ட 34 திட்டங்களுக்கு ஏற்கனவே ஆதார் கட்டாமயமாக்கட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தில் உணவு தானியங்கள், சமையல் காஸ் சிலிண்டர் பெறவும் ஆதார் ஏற்கனவே கட்டாயமக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 6 வகையான கல்வி உதவித் தொகை திட்டங்கள், தேசிய செயல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி, மாற்றுதிறனாளிகள் உதவி மற்றும் உபகரணங்கள் பெறவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கல்வி கடன், தொழில் கடன் உள்ளிட்ட திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், மது அடிமை மீட்பு, முதியோர் ஆகிய பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு உதவி பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் கலப்பு திருமண ஊக்கத் தொகை பெறுதல் போன்றவைக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மனித வள மேம்பாட்டு துறையின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர் ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இருக்க வேண்டும்.

தேசிய சுகாதார திட்டத்தில் உள்ள பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மறுவாழ்வு திட்டத்தி பயன் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு ஆதார் இல்லாமல் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அனைத்து துறை மூலம் மக்கள் சிரமமின்றி ஆதார் பெறுவதற்காகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் பதிவு சான்றிதழ் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 9 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். ஆதார் இல்லை என்பதற்காக எந்த ஒரு நபரும் எந்த திட்டங்களில் இருந்த விடுபடமாட்டார்கள். அதேபோல் அவசர சூழ்நிலை அல்லது சரியான நேரத்தில் பெற வேண்டிய பயன்களுக்கு ஆதார் ஒரு பொருட்டாக இருக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.