ன்று ஆடி அம்மாவாசை. மூதாதையார்களுக்கு பிடித்த நாளான இன்று, அவர்கள் நினைவைப் போற்றும் வகையில், அவர்களுக்கு திதி கொடுத்து, அவர்களின் ஆசிகள் பெற்று வாழ்வில் சுபிட்சத்தை பெறுங்கள்…

மாதந்தோறும்  அமாவாசை தினம் வருவது வாடிக்கை. இருந்தாலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தது.   இன்றைய நாளில், இறந்த நம் முன்னோர்களுக்காக  விரதம் இருப்பது நல்லதொரு பலனை தரும்.

ஆடி அமாவாசையில் நம் முன்னோர்களை நினைத்து வணங்குதல் சிறப்பு. காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று தர்ப்பணம் செய்து விசேசமாகும்.

தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்று அடைகிறது என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை அன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பவானி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள். சென்னை போன்ற இடங்களில் கோயில் குளங்களில், கடற்கரையில் தர்ப்பணம் கொடுப்பது உண்டு.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை படுக்கையில் இருந்து எழுந்து குளித்து விட்டு, சிவாலய தரிசனம் செய்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்தமாடுவது பாவத்தை போக்கி விமோசனம் அளிக்கும். அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக போய் பித்ருக்களை சென்று அடைவதாக ஐதீகம்.

ஆடி அமாவாசை குறித்து ஜோதிடம் என்ன சொல்கிறது?

சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றிணையும் புனிதமான தினமே ஆடி அமாவாசை தினம்.  ஜோதிட ரீதியாக பொதுவாக சந்திரன் பகவான் ஆடி மாதத்தில் கடக ராசியில் உச்சம் பெறுவார், சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பார். சிவ அம்சமான சூரியனும், சக்தியின் அம்சம் பெற்ற சந்திரனும் ஆடி அமாவாசை அன்று ஒன்றிணைவர். அதனால் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

இன்றைய தினம், இறந்த நம் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புண்ணிய நதிகள், கடல் போன்ற நதிகளில் நீராடி, இஷ்ட தெய்வங்களை வழிப்பட்டு, அன்னதானம் போன்றவை செய்தால், நம்மிடம் உள்ள பாவங்கள் விலகி, புண்ணியங்கள் சேரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இன்று தர்ப்பணம் செய்த கையோடு, காலை உணவை தவிர்த்து, மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவை தயாரித்து, அவர்களுக்கு படையலிட்டு, விளக்கேற்றி வணங்கி, அதை எடுத்து காகத்திற்கு படைக்க வேண்டும்.

பின்னர் வயதானவர்களுக்கு வயிறாற உணவிட்டு மகிழ வேண்டும். அதுபோல, வாய்ப்பு கிடைப்பவர்கள் பசு மாடுக்கு அகத்திக்கீரையை கொடுப்பபது மிகவும் சிறந்தது.

இந்த முன்னோருக்கான விரத வழிப்பாட்டினால், நாம்  செய்த பாவ வினைகள் நீங்கி, முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.