இன்று முதல் ஆடி மாதம்
தேவர்களின் பகல் பொழுது முடிந்துவிட்டது. நாளை முதல் தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயன புண்ய காலம் ஆரம்பிக்கப் போகிறது. அதனை முன்னிட்டு பித்ருகாரகனான சூரிய பகவான் இன்று மாலையே மாத்ருகாரகனான சந்திரனின் வீட்டில் தஞ்சம் அடையப் போகிறார். இன்னும் ஒருமாதத்திற்கு அங்கிருந்து ஆடிமாதத்தைச் சிறப்பிக்கப்போகிறார்.
தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு,  புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல்… இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.
ஆடிப்பண்டிகை
ஆடி அழைக்கும். உகாதி ஓட்டும்” என ஒரு சொலவடை உண்டு. அதாவது தமிழ் வருடத்தில் ஆடி மாதத்திலிருந்துதான் அனைத்து பண்டிகைகள் திருவிழாக்கள் தொடங்குகின்றன. யுகாதியோடு பண்டிகைகள் முடிந்துவிடும். அதன்பிறகு சித்திரை வருடப் பிறப்பைத் தவிர வேறு பண்டிகைகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் சிறப்பிக்கும் விதமாக ஆடி முதல் நாளில் ஆடிப்பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. வாசலில் கோலம் செம்மண்(காவி) எனக் களை கட்டத்தொடங்கிவிடும்.
தக்ஷிணாயனத்தின் முதன் நாளான ஆடிப்பண்டிகையின் போதும் கடைசி நாளான போகிப்பண்டிகையின் போதும் “போளி” எனும் இனிப்பு  செய்வது பிராமணர் இல்லங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது.
ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள். புதிதாகத் திருமணம் ஆன மணமகனை அழைத்து, ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம்.
ஆடிப்பட்டம்:
ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை முதல் ஆனி வரை வெய்யிலின் ஆர்ப்பாட்டம். ஆடியில் காற்றுடன். மழையும் பெய்யும்.அதனால் ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல்…இதனால் வந்தது..இந்த பழமொழி.. எனவே விவசாய நாடான நமது நாட்டில் பொன்னேரு பூட்டும் வழக்கம் மரபில் இருந்தது.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில் திருவிழாக்கள் தொடங்கும்.   அனைவரும் தற்போது வீட்டில் இருந்த படியே அம்மனை வணங்கி ஆசி பெறுவோமாக.