ஆடிப்பூரம் ஸ்பெஷல் ! (24/07/2020)
ஆடியில் பூத்த அரும்பு

வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை.
இவளை வடமாநிலங்களில் கோதா தேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிப்புத்தூரை அம்மக்கள் கோதா தேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்குச் சென்றுவருவது மிகவும் நல்லது. 
எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிப்பிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். 
அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாகப் பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளைத் தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்..

ஸ்ரீ ஆண்டாள் ஸ்துதி
கோலச்சுரி சங்கைமாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் தென்திருமல்லிநாடி செழுங்குழல் மேல்
மாலைத்தொடை தென்அரங்கர்க்கு ஈயும் மதிப்புடைய
சோலைக்கிளி அவள்தூய நற்பாதம் துணை நமக்கே.