மும்பை: முகமூடி அணிந்து கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குண்டர்கள், தீவிரவாதிகள் என மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே கண்டித்துள்ளார்.

டெல்லி ஜேஎன்யு வளாகத்தில் நேற்று மாணவர்கள் பேரணியில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் 50க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். மகாராஷ்டிராவின் இளம் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவும் வன்மையாக இந்த தாக்குதலை கண்டித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: மாணவர்களை முகமூடி அணிந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஜாமியா பல்கலைக்கழக தாக்குதல் ஆனாலும் சரி, ஜேஎன்யூ தாக்குதல் ஆனாலும் சரி.. கண்டிக்கத்தக்கது.

மாணவர்களை தாக்கியது குண்டர்கள்தான். நமது நாட்டுக்கு என்று உலகம் முழுவதும் ஒரு மரியாதை இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் அவை பாதிக்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் டெல்லி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குண்டர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். அவர்கள் குண்டர்கள் தீவிரவாதிகள் என்று காட்டமாக பேசியிருக்கிறார்.