டில்லி

டில்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றியைக் கொண்டாட தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாசு ஏற்படுத்த வேண்டாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த டில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.   தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என கூறப்பட்டுள்ளது.  தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஆம் ஆத்மி தலைவர்கள் இந்த வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக முடிவுகள் அறிவிப்புக்காகக் காத்துக்கொடு உள்ளனர்.    இதையொட்டி ஏராளமான இனிப்பு மற்றும் கார வகைகளை அவர்கள் வாங்கி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று இரவு டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், “வெற்றிக்கான கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என நான் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  இதனால் காற்று கடும் மாசு அடையும்.  அதைத் தவிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.