சென்னை:

திருப்பதி லட்டு தயாரிக்க தேவையான நெய் கொள்முதல் செய்ய தமிழக அரசின் ஆவின் நிறுவனத்துடன் திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது விரைவில் அதற்கான ஒப்பந்தம் போடப்பட உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஆவின் நிறுவனத்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய பயன்படும் நெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரி தேவஸ்தானம் தரப்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, 7 லட்சத்துக்கு 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

இதற்கு, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் (சேலம் – ஈரோடு ஒன்றியங்கள்) டெண்டருக்கு விண்ணபித்திருந்தது. இதில் ஆவின் நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ரூ.23 கோடி மதிப்பில், 7.24 லட்சம் கிலோநெய் கொள்முதல் செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பு 2003 – 2004 ஆம் ஆண்டு ஆவின் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. தற்போது, 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.