உங்களுக்கு 65 வயதா? கொரோனா தயவால் தபால் ஓட்டளிக்கலாம்..
மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தலில் 80 வயது பூர்த்தியானவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்க , தேர்தல் ஆணையம் வழி வகை செய்துள்ளது.
கடந்த ஆண்டு இது தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் வயதானவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ளும் என்பதால், 65 வயதானவர்கள் தபால் மூலம் ஓட்டளிக்கலாம் என மத்திய சட்டத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று உச்சம் தொட்டு நிற்பதால் 65 வயதானோரைத் தபால் மூலம்  ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் மத்திய அரசைக் கேட்டிருந்தது.
அதனை ஏற்று, 65 வயதுக்காரர்களுக்கு, தபால் ஓட்டுரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் ஏற்பட்ட பின் , பீகார் மாநிலம் முதன் முறையாகச் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
எனவே  தபால் மூலம் ஓட்டளிக்கும் சலுகையைப் பீகார் மாநில முதிய வாக்காளர்கள் முதன் முறையாகப் பெறப்போகிறார்கள்.
அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
-பா.பாரதி.