வாஷிங்டன் :

1789 ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக பொறுப்பேற்ற ஜார்ஜ் வாஷிங்டன் தொடர்ந்து இரு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்றாவது முறையாக 1797-ம் ஆண்டு அவரை மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட எழுந்த கோரிக்கையை நிராகரித்த ஜார்ஜ் வாஷிங்டன், பதவிக்காலத்தில் தான் இறக்க நேரிட்டால், வாழ்நாள் வரை அதிபராக இருந்தவர் என்று வரலாறு தன்னை ஏளனம் செய்யும் என்றும் ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகி விடும் என்றும் கூறி, அந்த கோரிக்கையை அவர் நிராகரித்தார். அப்போது அவருக்கு வயது, 65.

இவருக்கு அடுத்து அமெரிக்க புரட்சியில் ஜார்ஜ் வாஷிங்டனுடன் சேர்ந்து உழைத்தவரும் அமெரிக்காவை நிர்மாணித்தவர்களில் ஒருவருமான ஜான் ஆடம்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது அதிபராக 4 மார்ச் 1797 ல் பதவியேற்று 4 மார்ச் 1801 வரை இந்த பதவியில் இருந்தார். பெடரல் கட்சி என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் ஜான் ஆடம்ஸ் மட்டுமே.

அதற்கு முன், ஜார்ஜ் வாஷிங்டன் அரசில் துணை அதிபராக இருந்த ஜான் ஆடம்ஸ் 1800 ம் ஆண்டு நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டார், இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் தாமஸ் ஜெபர்சனிடம் இவர் தோல்வியுற்றார்.

தோல்வியை ஒப்புக்கொள்ளாத ஜான் ஆடம்ஸ் தன்னை எதிர்த்து வெற்றிபெற்ற தாமஸ் ஜெபர்சனுக்கு பதவியை ஒப்படைக்க மறுத்துவிட்டார்.

மார்ச் 4, 1801 அன்று நடந்த உச்சபட்ச குழப்பத்திற்கிடையே, அதிகார அமைப்புகளான ராணுவம், உளவுத்துறை, வெள்ளை மாளிகை அதிகாரிகள் உள்பட அனைவரும் இவரின் ஆணையை ஏற்க மறுத்து தாமஸ் ஜெபர்சனுக்கு கீழ் பணியாற்ற தொடங்கினர்.

தாமஸ் ஜெபர்சன், அதிபராக பதவியேற்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்கவில்லை அல்லது இவர் அழைக்கப்படவில்லை என்று தெரிகிறது.

ஜான் ஆடம்ஸ்

ஜான் ஆடம்ஸ் துணை அதிபராக இருந்த போதும், தனக்கு துணை அதிபர் பதவி வழங்கி தன்னை சிறுமைப் படுத்திவிட்டதாக தனது மனைவியிடம் வேதனைப்பட்டதாக, அவர் எழுதிவைத்த குறிப்புகளில் கூறியிருக்கிறார்.

தாமஸ் ஜெபர்சன் பதவியேற்ற பின்னர், வெள்ளை மாளிகை ஊழியர்கள் ஜான் ஆடம்ஸின் உடமைகளை வெள்ளை மாளிகையில் இருந்து அகற்றத் தொடங்கினர். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்த முதல் அதிபர் ஜான் ஆடம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 20 பிற்பகல் புதிய அதிபரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று முன்னாள் அதிபர் வெளியேறும் சம்பிரதாயம் அப்போது நடைமுறையில் இல்லை, பின்னர் நடந்த அரசியல் சாசன திருத்தங்களில் தான் ஜார்ஜ் வாஷிங்டனை கௌரவிக்கும் விதமாக இருமுறைக்கு மேல் யாரும் அதிபராக போட்டியிடுவதில்லை, ஜனவரி 20 பதவியேற்பு நிகழ்ச்சி போன்ற சம்பிரதாயங்கள் இடம் பெற்றன.

இந்த திருத்தங்கள், தோல்வியை ஏற்றுக்கொண்டு அதிபராக இருப்பவர் வெளியேறுவதற்கான கால அவகாசம் அளிப்பதுடன், ராணுவம், உளவுத்துறை, வெள்ளை மாளிகை ஊழியர்கள் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளால் அதிபருக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் அவமானத்தையும் தவிர்க்க உதவுகிறது.

தற்போது, டொனால்ட் டிரம்பைக் காட்டிலும் ஜோ பைடன் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கும் நிலையில், அனைத்து மாகாண மற்றும் மத்திய தேர்தல் அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின் நடைபெறப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

தற்போது பதவியில் இருக்கும் அதிபருக்கும், அதிபராக பதவியேற்க இருப்பவருக்கும் பாதுகாப்பு விவகாரங்களில் தனது கவனத்தை உளவுத்துறை சமமாக செலுத்தும்.

தலைமை தளபதியாக இருக்கும் அதிபருக்கு மட்டுமே ரகசிய விவகாரங்களை பகிர்ந்து வந்த புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இப்போது முதல் இருவருக்கும் தகவலளிக்கும்.

சி.ஐ.ஏ.-வின் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் சி.ஐ.ஏ.-வின் இணை புலனாய்வு குழுக்களும் உயர் ரகசிய விவகாரங்களை இருவருக்கும் விவரிக்கும்.

வெள்ளை மாளிகை ஊழியர்கள், புதிய அதிபரின் விருப்பத்திற்கு ஏற்ப அதிபர் மாளிகையை மாற்றியமைக்கத் தொடங்குவார்கள்.

ஜனவரி 20 பிற்பகல், வெளியேறும் அதிபரின் உடைமைகளை வெளியேற்றி, புதிய அதிபரின் உடைமைகளை மாளிகைக்குள் கொண்டு வருவதை யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்காமல் வெள்ளை மாளிகை ஊழியர்கள் நிறைவேற்றுவார்கள்.

அதிபர் மாளிகைக்கான வாடகைப்படி பிடித்தம் ஜனவரி மாதம் டிரம்பின் சம்பளத்தில் நிறுத்தப்பட்டு, ஜோ பைடன் சம்பளத்தில் இருந்து ஜனவரி முதல் பிடிக்கப்படும்.

அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் நிர்வாகம் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பிடம் இருந்து பைடேன் மனைவி டாக்டர். ஜில் பைடேனிடம் கைமாறும்.

வெளியேறும் அதிபரின் பாதுகாப்பை அவரது வாழ்நாள் முழுவதும் ஏற்கவேண்டியிருப்பதால், புலனாய்வு குறித்த ஒருசில தகவலைகளைத் தவிர, பென்டகன், சி.ஐ.ஏ., அட்டர்னி ஜெனரல் உள்ளிட்ட அரசியல் அமைப்பும், அரசியல் அமைப்பச் சேர்ந்தவர்களும் ஜனவரி 20 பிற்பகலுக்குப் பின் டிரம்புடன் எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் செய்யமாட்டார்கள்.

‘தி பீஸ்ட்’ என்று அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ கார் மற்றும் ஏர்போர்ஸ் ஒன் எனப்படும் அதிபரின் விமானம் ஆகியவை, கடைசியாக ஒருமுறை டிரம்பிற்கு அணிவகுப்பு மரியாதை செய்துவிட்டு, பைடனின் உத்தரவுக்காக காத்திருப்பதுடன் யாருடைய உத்தரவும் இல்லாமல் பைடனின் ரத்த மாதிரிகளை உடன் சுமந்து செல்லும்.

வாழ்நாள் முழுவதும் அதிபராக விரும்பவில்லை என்று தெரிவித்த ஜார்ஜ் வாஷிங்டன் தொடங்கி, 220 ஆண்டுகால பாரம்பரியமிக்க ஜனநாயகத்தில்.

வெள்ளை மாளிகையில், வெளியேறும் அதிபரும் புதிய அதிபரும் கடைபிடிக்கும் சம்பிரதாயங்கள் இது தான் என்றாலும், ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து அதிபர் டிரம்ப் நாளை நீதிமன்றத்தை நாடுவாரா என்பதையே உலகம் இப்போது ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.