ஸ்லாமாபாத்

ந்தியாவுடன் திடீர் என போர் மூள வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு விதி எண் 370 ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அந்த பிரதேசத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க உள்ளதாக அறிவித்தது.  தற்போது காஷ்மீரில் இந்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இதனால் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.   ஐநா பாதுகாப்புச் சபை, உள்ளிட்ட பல அமைப்புக்களில் இது குறித்து பாகிஸ்தான் அளித்த புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஜெனிவாவில் நடந்த ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இந்தியா காஷ்மீர் பகுதியில் மனித உரிமையை மீறி செயல்படுவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.   அதற்கு இந்தியா, ”பாகிஸ்தானின் புகாரில்  காஷ்மீர் நிலைமை தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதம் தலை தூக்க முடியாதபடி இந்தியா நடவடிக்கை எடுப்பதால் அந்நாடு இவ்வாறு புகார் அளிக்கிறது” எனத் தெரிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தனது செய்தியாளர்கள் சந்திப்பில், “காஷ்மீரில் தற்போதுள்ள நிலை குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் நன்கு தெரியும் என நான் நம்புகிறேன்.   இந்த விவகாரம் குறித்து காஷ்மீர் பகுதியை நேரில்  பார்வை இட நான் ஐநா மனித உரிமை ஆணையக் குழுவினர் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அந்தக் குழிவினர் காஷ்மீரின் இந்தியப் பகுதி மற்றும் பாகிஸ்தானியப் பகுதி ஆகிய இரண்டையும் பார்வை இட உள்ளனர்.  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மனித உரிமைகளை மதிக்காமல் கட்டுப்பாடு விதித்துள்ளது.   இதனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே திடீர் என போர் மூளும் வாய்ப்பு அதிகம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.