கொரோனா பாதிப்பால் கேரள மாநிலத்தில் உள்ள ஓட்டல்களில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அறை கொடுப்பதில்லை.

இத்தாலியை சேர்ந்த பயணி ஒருவர், கோட்டயம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்குள்ள ஓட்டலில் அவருக்கு அறை கொடுக்க மறுத்து விட்டனர்.

வேறு வழியில்லாமல் அவர், அருகேயுள்ள சுடுகாட்டில் தூங்கி இரவு பொழுதை கழித்துள்ளார்.  இதே போன்ற நிலை அர்ஜெண்டினாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேர்ந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலில் அவர் ஏற்கனவே அறை முன்பதிவு செய்திருந்தார்.
கொரோனா பீதி காரணமாக ஓட்டல் மனேஜர் அவருக்கு அறை கொடுக்க மறுத்துவிட்டார்.

பல ஓட்டல்களுக்கு அலைந்தும், அவர் முயற்சி வீணானது. இரவு முழுவதும் ரோட்டில் படுத்து உறங்கியுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை படித்து பார்த்த நடிகர் மோகன்லால், உருகி போய் விட்டார்.

‘’ இது-மனிதாபிமானமில்லாத செயல். கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் நம்ம ஊரை பார்க்க நாம் தான் வெளிநாட்டு காரர்களை அழைத்தோம். தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை நம் மாநிலத்தில் செலவளிக்க வந்த அவர்களை இப்படி நடத்துவது தான் நமது கலாச்சாரமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார், மோகன்லால்.