சென்னை: பெண்களுக்கு இலவச பயணம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி சென்னையில் 1,000 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக சாதாரண கட்டண பேருந்து மற்றும் மினி பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிரும், கட்டணமின்றியும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் இன்று (மே 8) முதல் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ.1,200 கோடியை, அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் மகளிர் அனைவரும் சாதாரண கட்டண பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம். எந்த வகை பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் எந்த வகையான பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை என்பதை இந்த பதிவில் காணலாம்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சுமார் 1,000 பேருந்துகள் சாதாரண கட்டணப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இந்த 1,000 மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
தற்போது கொரோனா பரவலைத் தடுக்க 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பேருந்துகளை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.