ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ‘ஜன சேனா’ கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகராக விளங்கும் பவன் கல்யாணின் வக்கீல் சாப் படம் கடந்த 9ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

பட வெளியீட்டு தொடர்பான கூட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்ட பவன் கல்யாண் அண்மையில் தமது உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்தார்.

இந் நிலையில், லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்த பவன் கல்யாணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களின் முழு ஆலோசனையின் பேரில் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த புகைப்படங்களும் அவரது அறிக்கையையும் ஜன சேனா கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.