‘நானே ராஜா நானே மந்திரி’, ‘அண்ணா நகர் முதல் தெரு’ ஆகிய படங்களின் இயக்குநரும், நடிகருமான பாலு ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61
இவருக்கு நேற்றிரவு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் மருத்துவனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அதற்குள் உயிர் பிரிந்தது. இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது.
இவருடைய மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு  ஸ்ரீவேலுமணி என்ற மகளும், ஸ்ரீசரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள்.
download (4)
‘நானே ராஜா நானே மந்திரி’, ‘அண்ணா நகர் முதல் தெரு’, ‘ரசிகன் ஒரு ரசிகை’, ‘உனக்காக பிறந்தேன்’ உள்ளிட்ட 20 படங்களுக்கு மேல் இயக்கிய பாலு ஆனந்த்,  இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனிடம் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இருந்து சுமார் 20 படங்களுக்கு மேல் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். சமீப காலமாக கோயம்புத்தூர் அருகே உள்ள சொந்த ஊரில் வசித்து வந்தார்.
பாலு ஆனந்த் மறைவுக்கு திரையுலகில் உள்ள பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்கள்.