மும்பை

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

தனது இயல்பான நடிப்புத் திறனால் உலக ரசிகர்களையை கட்டிப்போட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 54.

சலாம் பாம்பே திரைப்படத்தில் அறிமுகமான இர்ஃபானுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் ஏறுமுகம் தான். தி லன்ச் பாக்ஸ், தல்வார், பிக்கு, ஜஸ்பா, ஹிந்தி மீடியம், ப்ளாக் மெயில்,கர்வான், பில்லு என பல படங்களில் தன் நடிப்பால் பார்வையாளர்களை கட்டிப் போட்டவர் இர்ஃபான்.

தி ஜங்கிள் புக், ஜுராசிக் வேர்ல்ட், லைஃப் ஆஃப் ஃபை, ஸ்லம்டாக் மில்லியனர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களால் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றவர்.

நியூரோ என்டாக்ரின் டியூமர் எனும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது பெருங்குடல் தொற்று காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இர்ஃபான் மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன் இர்ஃபானின் தாய் மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கை இர்ஃபான் கான் வீடியோ காலில் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.