வெள்ளம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் ஜெயசூர்யா. இந்தப் படத்தை பிரஜேசன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமின்றி தப்பியுள்ளார் ஜெயசூர்யா.

கதைப்படி பவர் டிரில்லர் வாகனத்தை இயக்கியபடி அவர் நடந்து வருவார். அதைத் தூரத்தில் இருந்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறி அவரை ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்றது.

இதைக் கண்ட படக்குழுவினர் ஓடிச்சென்று ஜெயசூர்யாவை பிடித்து இழுத்தனர். வாகனம் விழ இருந்த இடம் பெரிய பள்ளம் என்பதால், படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.