மும்பை: ஐபிஎல் அடுத்த சீசனில் கூடுதலாக களமிறக்கப்படும் ஒன்பதாவது அணியை வாங்குவதற்கு, மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லால் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

13வது ஐபிஎல் தொடரை, அமீரக நாட்டில் நாட்டில் நடத்தியதால், பிசிசிஐ அமைப்பிற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த தொடருக்கு கூடுதலாக ஒரு அணியை சேர்ப்பதற்கு அந்த அமைப்பு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

குஜராத் தலைநகர் அகமதாபாத் பெயரில் அறிமுகமாகும் அந்த அணியை, பார்ட்னர்ஷிப் முறையில் வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளாராம் மலையாள நடிகர் மோகன்லால். அதாவது, பைஜூஸ் நிறுவனத்துடன் இணைந்து வாங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்பொருட்டு, துபாய் சென்ற மோகன்லால், பிசிசிஐ நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் புதிய அணியை வாங்குவதற்கு அதானி நிறுவனமும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அகமதாபாத் பெயரில் புதிய அணியை நிரந்தரமாக சேர்ப்பதில், தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கும் குஜராத்தைச் சேர்ந்த ஜெய்ஷா ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.