வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளையொட்டி, தருமபுரி அருகே உள்ள அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவர் கோயிலில், நீண்ட ஆயுளுடன் ரஜினிகாந்த் மக்கள் பணியாற்றிட வேண்டி, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. ரஜனிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா மற்றும் குடும்பத்தினர் சார்பில் நடந்த பூஜையில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சத்தியநாராயணா, “ரஜினிகாந்த் மட்டுமின்றி நாட்டு மக்களும் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இந்த யாகம், பூஜைகள் நடந்தன. ரஜினிகாந்த் 2020ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என ஏற்கெனவே அவர் கூறியுள்ளார். எதற்கும் ஆசைப்படாத அவர் முதல்வரானால், மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பார். காலபைரவரின் அழைப்பால் நாங்கள் இங்கு வந்து யாக பூஜைகள் மற்றும் அன்னதானம் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.