நின்று போன மாநாடு படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டு, அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ள நடிகர் சிம்பு, சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக மாலை அணிந்துள்ளார்.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். இந்தப் படம் தொடர்பான அனைத்துப் பணிகளுமே முடிவடைந்து விட்டன. சிம்புவின் கால்ஷீட் தேதிகளுக்காகக் காத்திருந்தது படக்குழு.

ஆனால், சிம்புவுக்கும்; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், நடிகர் சிம்புவுக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது. அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு, அதற்கான, ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவெடுத்தார்.கடந்த வாரம், ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விட்டார் சிம்பு.

இந்தப் பணி சுமூகமாக முடிந்தால்,  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக நடிகர் சிம்பு ஏற்கனவே வேண்டியிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்துக் கொண்டார். அவருடன் நடிகர் மகத்தும் மாலை அணிந்துக்கொண்டார்.

முன்னதாக கடந்த 1992ம் ஆண்டு எங்க வீட்டு வேலன் என்கிற படம் சிறப்பாக வந்த சமயத்தில், மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு சென்ற நடிகர் சிம்பு, தற்போது 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மாலை போட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.