திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்ததாக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான  ஹெச்.ராஜா ஒப்புக்கொண்டிருப்பது வெட்கம்கெட்ட செயல் என்ற நடிகர் சங்க தலைவர் விஷால் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா, ‘நான் மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சங்க தலைவர் விஷால் தெரிவித்திருப்பதாவது:

’ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

எச். ராஜா அவர்களுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார் விஷால்.