சென்னை

 சின்னத்திரை நடிகையான சித்ரா அவர் கணவரால் அடித்துக் கொல்லப்பட்டதாக  அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.   சித்ராவின் தந்தையும் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருமான காமராஜ் அளித்த  புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது.   அவரை சமீபத்தில் பதிவுத் திருமணம் செய்துக் கொண்ட ஹேம்நாத் இடம் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யபடது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆய்வுக்குப் பிறகு சித்ராவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.    அதன்பிறகு அவர் உடல் கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

மாலை சித்ராவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.    இதற்கிடையில் உடற்கூறாய்வு அடிப்படையில் சித்ரா தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அவரது கன்னம் மற்றும் தாடையில் இருந்த ரத்த காயங்கள் அவரே அவரது கையால் ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சித்ராவின் தாயார் விஜயா இதை மறுத்துள்ளார்.  அவர் தனது மகளைப் பதிவுத் திருமணம் செய்துக் கொண்ட ஹேமநாத் அடித்துக் கொன்றுள்ளதாகக் கதறியபடி தெரிவித்துள்ளார்.   காவல்துறையினர் தற்கொலை எனக் கூறுகையில் தாயார் இதைக் கொலை என்பது சொல்வது கடும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.