சென்னை

பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று சிறிதும் குறையாமல் உள்ளது.  அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும் பாதிப்பு குறையாமல் உள்ளது.  இந்த கொரோனா பாதிப்பு பல அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரையும் பாட்ர்ஹித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே நடிகைகள் தமனா, ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.  அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை அவர் தனது டிவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

ராகுல் பிரீத் சிங் தனது டிவிட்டரில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்.  என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்” எனப் பதிந்துள்ளார்.