பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் அந்த அமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டபூர்வ போராட்டங்களும் தொடர்கின்றன.

இந்த நிலையில், தடையை  மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பீட்டா அமைப்பு பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியது.

இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், பீ்ட்டா அமைப்புக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பதாக நடிகை த்ரிஷா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதற்கிடையே,   நேற்று நடிகை த்ரிஷா எச்.ஐ.வி தொற்றுகாரணமாக இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவலை பதிந்தார்கள்.

இந்நிலையில்,இது குறித்து தனது ஆதங்கத்தை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் இழிவுபடுத்துவது தான் தமிழ் கலாச்சாரமா?  நீங்கள் தமிழர் என்பதற்கும், தமிழ் கலாச்சாரம் குறித்து பேசுவதற்கும் வெட்கப்பட வேண்டும்” என்று த்ரிஷா  பதிவிட்டுள்ளார்.