டில்லி

லேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் அதானி, பதஞ்சலி மற்றும் இமாமி உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடையும் என சொல்லப்படுகிறது.

காஷ்மீர் மற்றும் குடியுரிமை சட்ட விவகாரங்களில் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.   இதனால் மிகவும் எரிச்சல் அடைந்த மோடி அரசு மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என வர்த்தக சங்கங்களுக்கு தடை விதித்தது.   மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவைகளில் மலேசிய பாமாயில் 45% நிறைவு செய்கிறது.  இந்தியாவில் உள்ள சமையல் எண்ணெய்களை விட மலேசிய பாமாயில் விலை குறைவாக இருந்ததால் பல வர்த்தகர்கள் இறக்குமதி செய்து வந்தனர்.   இதனால் இந்தியாவின் உள் நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தன.

இந்தியாவில் அதானி வில்மார், இமாமி அக்ரோடெக், கோகுல் அக்ரோ ரிசோர்ஸஸ், கார்கில், மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் அகிய நிறுவனங்கள் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது.  பதஞ்சலி ஆயுர்வேத் சமீபத்தில் ருசி சோயா நிறுவனத்தை விலைக்கு வாங்கி உள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்து வருகின்றன.

மலேசியாவில் இருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா பாமாயில் இறக்குமதி செய்யத் தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   இதனால் இந்த நிறுவனங்கள் மலேசியாவில் இருண்டு. கச்சா எண்ணெய் வாங்கி அதைச் சுத்திகரித்து விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.  இதன் மூலமும் இந்த நிறுவனங்கள் பயனடையக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக அதானி வில்மர் நிறுவனம் ஃபார்ச்சூன் என்னும் பெயரில் சோயா எண்ணெய்,  சூரிய காந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், கடலை எண்ணெய், மற்றும் பருத்தி விதை எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது.   மலேசிய பாமாயில் இறக்குமதி தடையால் இந்நிறுவனம் அதிக அளவில் பயனடைய வாய்ப்புள்ளது.   இந்நிறுவனத்தைப் போலவே இமாமி உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் சமையல்  எண்ணெய் விற்பனையும் அதிகரிக்கக் கூடும்.