சென்னை:
சென்னை தமிழகம் முழுதும் வாழும், ‘ஈழுவா, தீயா’ வகுப்பினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணைகளை, தமிழ்நாடு ஈழுவா, தீயா சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம், முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார்.

ஈழுவா மற்றும் தீயா வகுப்பினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, செங்கோட்டை தாலுகாவும், திருவாங்கூர் -கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன.அந்த சமஸ்தானத்தில் சலுகைகள் பெற்று வந்த ஜாதியினருக்கு, தமிழகத்திலும் அச்சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலும், செங்கோட்டை தாலுகாவிலும், ஈழுவா வகுப்பினர், பிற்படுத்தப்பட்டவர்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிக்கும், ஈழுவா வகுப்பினருக்கு, பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் வழங்குவது; தீயா வகுப்பினரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெறப்பட்டது.இதை ஆய்வு செய்ய, வருவாய் துறை செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களில் வாழும், ஈழுவா வகுப்பினருக்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.தீயா வகுப்பினர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவற்றுக்கான ஆணைகளை, தமிழ்நாடு ஈழுவா, தீயா சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம், நேற்று முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலுமணி, வளர்மதி, துணை சபாநாயகர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.