னித இனத்தின் தோற்றம் ஆப்பிரிக்காவில் நிகழவில்லை. மாறாக ஐரோப்பா கண்டத்திலேயே நிகழ்ந்தது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

72 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்களை வைத்து ஆய்வு மேற்கொண்ட ஜெர்மனியின் டூபின்ஜென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிஎல்ஓஎஸ் ஒன் (PLOS ONE) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், மனித இனத்தின் தோற்றம் குறித்த வரலாறு ஆய்வு தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.

மனித இனத்தின் மூதாதையர்களாகக் கருதப்படும் கிரேட் ஏப்ஸ் எனப்படும் குரங்கின் அடுத்த பரிணாம வளர்ச்சி நாம் தற்போது எண்ணுவதைவிட பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சத்தியம் செய்கிறார்கள் ஜெர்மனி ஆய்வாளர்கள்.

இதற்கு சாட்சியாக மனித இனத்தின் மூதாதையரான கிரேகோபேதிகஸ் ஃப்ரேபெர்கி (Graecopithecus freybergi ) எனும் குரங்கின் எச்சங்களைக் காட்டுகின்றனர்.

கீரீஸில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குரங்கின் கீழ்தாடை மற்றும் பல்கேரியாவில் கண்டு எடுக்கப்பட்ட  முன்தாடை பல் ஆகியவற்றின் தோற்றம் குறித்து நவீன தொழில்நுட்பம் மூலம் ஆய்வுகள் மேற்கொண்ட ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

“எல் கிரேகோ (El Graeco) என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் கீழ்தாடை எலும்புகளில் மனித இனத்தைப் போலவே ஈறுகள் வளர்ச்சி கிரேகோபேதிகஸ் ஃப்ரேபெர்கி குரங்கினத்துக்கும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம் என்றும்,

மனித இனம் சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து பரவலாக இருக்கும் நிலையில், இந்த புதிய தகவல் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று ஆய்வு குறித்து பேசிய டூபின்ஜென் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜோஹன் ஃபஸ் தெரிவித்துள்ளார்.