கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அத்தப்பாடி வனப்பகுதியில் வசித்து வந்த 27 வயதான மது என்ற பழங்குடி இளைஞர்,  கடந்த வியாழன்று அரிசி திருடியதாகக் கூறி 16 பேர் கொண்ட கும்பலால் அடித்தே கொலை செய்யப்பட்டார்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடைய 16 பேரை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் காவல்துறை கைது செய்துள்ளது.

மனம் நலம் குன்றிய நிலையில் காட்டுக்குகைகளில் வசித்து வந்த மது, பசி காரணமாகத் தான் நகர பகுதிக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த அன்று, காட்டுக் குகையில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டார் எனவும் அதில் மதுவின் மார்பு எலும்பு இரண்டாக உடைந்ததாகவும், அவரது உடல் உள்ளுறுப்பு களின் பல்வேறு பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் தகவல்  வெளியானது.

மேலும், குடிக்க தண்ணீர்கூட அளிக்காமல் இழுத்துச் சென்றார்கள் என்பதும் தெரியவருகிறது.

இந்த நிலையில், திருச்சூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மதுவின் பிரதேசப்பரிசோதனை விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதில், மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை என்றும்,  சில காட்டுப்பழங்களும், ஒரேயொரு வாழைப்பழத் துண்டும் மட்டுமே அவரது இரைப்பையில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்