சென்னை: அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மக்களுக்காக அதிமுக தொடர்ந்து இயங்கும் என ஜெயலலிதா கூறி உள்ளார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையுடன் இருந்து தேர்தலில் வெற்றிபெற பணியாற்ற வேண்டும். அதிமுகவின் சாதனைகளை பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் மூலமாக மக்களை சென்றடையச் செய்ய வேண்டும். அதிமுகவினர் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.