சென்னை:

சென்னை ஜுன் 12-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஒற்றைத் தலைமையுடன் அதிமுகவை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்வு செய்ய வேண்டும்.

முடிவு எடுக்கும் நிலையில் கட்சித் தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமை வேண்டும் என்பதை அதிமுக பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜுன் 12-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதில் அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்கின்றனர். மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சிப் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.