சென்னை:

திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்டபோது என்ன மாதிரியான உருப்படியான திட்டங்களை அளித்தீர்கள்? ” என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டம் ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கியது.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம், அதிமுக எஃகு கோட்டை! எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. தமிழ்நாட்டின் அரசியல், நேற்று இன்று நாளை என எப்போதும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுத்து, அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதுகூட பெருமைதான். எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநில வருவாயில் 60% நிதியை ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக செலவிட்டவர் ஜெயலலிதா . திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன்…திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்டபோது என்ன மாதிரியான உருப்படியான திட்டங்களை அளித்தீர்கள்? ” என்று கேள்வி எழுப்பினார்.

ஒபிஎஸ் தன்னுடைய உரையின் இறுதியில் போய் வாருங்கள் உடன்பிறப்புகளே ; வெற்றியை கொண்டு வாருங்கள் உடன்பிறப்புகளே என்றார்

வழக்கமாக தொண்டர்களை அதிமுக இரத்தத்தின் இரத்தங்கள் என்றும், திமுக உடன்பிறப்புகள் எனவும் அழைக்கும்.