சென்னை: முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இரட்டை வேடம் போடும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக நாடகமாடுவது ஒருபுறமென்றால், உரிமைக்காகப் போராடுவோரைக் கைது செய்து கொடுமைப்படுத்தும் படலம் இன்னொரு புறம் அரங்கேறுகிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக் கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியதாகும்.

உரிமைப்போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவி மடுக்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்தி வையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமையவிருக்கும் தி.மு.கழக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து உள்ளார்.