சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 38 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து வருகின்றன.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும்  18 சட்டமன்ற தொகுதிகளில், ஏற்கனவே திருவாரூர் தொகுதிக்கு அதிமுக கட்சி  விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள 17 தொகுதி களுக்கு   அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வரும் 13 ம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது..

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், வரும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக 25 ஆயிரம் ரூபாயை கட்சியின் தலைமை அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் தவறாமல் திரும்ப வழங்க வேண்டும்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டதால், அவர்கள் மீண்டும் விருப்ப மனு அளிக்க தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.