சென்னை,

தாரமில்லாமல் பால் நிறுவனங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டினார். தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனக் கலப்படம் உள்ளதாகக் கடந்த மே மாதம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 10ந்தேதி விசாரணையின்போது, அமைச்சர் ஆதாரமில்லா மல் பேசக்கூடாது என்று உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், அமைச்சர் மீண்டும் ஆதாரமற்ற தகவல்களை பரப்புவதாக தனியார் பால் நிறுவனங்கள் உயர்நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம் அமைச்சரை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளது.

பால் நிறுவனங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று தமிக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதி மன்றம், கோர்ட்டு  உத்தரவை முறையாகப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடுத்தது.

மேலும், பால் கலப்பட வழக்கில் விரிவான விசாரணை நாளைப் பிற்பகலுக்கு நடக்கும் எனக் கூறி நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.