அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடுத்த சாட்டை’. சமுத்திரக்கனி தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது.

இந்நிலையில் நேற்று சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் ”நேர்மை இல்லை.” என்று பதிவிட்டார். பின் சற்று நேரத்திற்கெல்லாம் “லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் “அடுத்த சாட்டை” திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் லிப்ரா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் “நாங்கள் கொடுத்த 50 லட்சம் ரூபாய் தவிர எங்களுக்கும் ’அடுத்த சாட்டை’ திரைப்படத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை , அதை அவர்கள் நியாயப்படி திருப்பி தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்சன்ஸ் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டனர்.

இருவரின் பதிவுகளை வைத்து பார்க்கும் போது ‘அடுத்த சாட்டை’ வெளியீட்டுச் சிக்கலில் சிக்கியுள்ளது உறுதியாகியுள்ளது.