சென்னை: வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரை வழங்கி உள்ளது.

தமிழகத்தில்  செப்டம்பர் 1 முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆகையால் நாளை முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந் நிலையில் நாளை முதல் வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரை வழங்கி உள்ளது.

அதன் படி, 5 மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும். நள்ளிரவு முதல் காலை 04.00 மணி வரை நடத்துனர்கள் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும். போக்குவரத்து நெரிசல், வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என்று  போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.