டில்லி:

மேகாலயாவில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

மேகாலயாவில் ஏ.எப்.எஸ்.பி.ஏ., என்ற ஆயுத படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் இருந்தது. இதற்கு அம்மாநில மக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இச்சட்டத்தின் மூலம் மாநிலத்தில் ஆயுத படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்க வகை செய்யப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் வரை மேகாலயாவின் 40% பகுதிகளில் ஏ.எப்.எஸ்.பி.ஏ. அமலில் இருந்தது. இதை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மேகலாயா மாநிலம் முழுவதும் ஏ.எப்.எஸ்.பி.ஏ. ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதேபோல் அருணாசல பிரதேசத்தில் 16 போலீஸ் ஸ்டேஷன் எல்லைப் பகுதிகளில் ஏ.எப்.எஸ்.பி.ஏ. அமலில் இருந்தது. இதை 8 போலீஸ் ஸ்டேஷனாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சரணடையும் கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இது ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.