புதுடெல்லி: நாட்டின் எல்லைப்புற மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் 3 மாவட்டங்களில், ஆயுதப் படைகளுக்கான சிறப்புச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

சீன மற்றும் மியான்மர் எல்லையில் அமைந்திருக்கும், திபெத்தை ஒட்டிய இமயமலை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் 9 மாவட்டங்களில், இந்த சிறப்பு ஆயுதப்படை சட்டம் கடந்த 32 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.

தற்போது, அந்தச் சட்டம் 3 மாவட்டங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், மியான்மர் எல்லைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் அந்த சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி கமிட்டி, இந்த சட்டத்தை நீக்குவதற்கு பரிந்துரை செய்திருந்தது. வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில், இந்தச் சட்டம் அமலில் இருக்கிறது என்பதும், இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியான பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி