சென்னை

ரும் 21 ஆம் தேதியன்று சுமார் 397 ஆண்டுகளுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகே ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன.

வரும் 21 ஆம் தேதி அன்று வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து பூமிக்கு மிக அருகே வருகின்றன.  இவை இரண்டும் அன்று ஒரே கோள் போலக் காட்சி அளிக்க இருக்கிறது.,  இந்த நிகழ்வைத் தொலை நோக்கி உதவி இன்றி நேரில் காண முடியும் என சொல்லப்படுகிறது.  இது குறித்து பிர்லா கோளரங்க இயக்குநர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தகவல் அளித்துள்ளார்.

சவுந்தரராஜன், “விண்ணில் அவ்வப்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் பார்த்து பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்கின்றனர்.   2021 ஆம் ஆண்டின் கடைசி முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. அந்த கிரகணத்தை அர்ஜென்டினா, சிலி மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில்தான் காணமுடிந்தது.  இதைப் போல் வருகிற 21-ந்தேதி மற்றொரு அதிசய நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் நெருங்கி ஒரே கோளாகக் காட்சி அளிக்க இருக்கின்றன.

இந்த நிகழ்வு வானியல் விஞ்ஞானிகளையும், மாணவர்களையும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளது. கடந்த 3 மாதங்களாக வாயு பெருங்கோள்களான சனியும் வியாழனும் தொடர்ந்து வானில் மேற்கு திசையில் காட்சி அளித்து வருகின்றன. இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன.

வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணி அளவில் மேற்கு வானத்தில் அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்காகக் குறைந்து இரண்டு கோள்களும் நம்முடைய கண்களுக்கு நேர்கோட்டில் வருவதால் அவை ஒரே கோளாகக் காட்சி அளிக்க இருக்கின்றன. இந்த நிகழ்வை வெறும் கண்ணால் அனைவரும் பார்க்க முடியும்.

இத்தகைய அபூர்வ நிகழ்வால் எந்த பாதிப்பும் ஏற்படாது. வழக்கமாக வியாழன் கோள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி கோள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் வேறுபட்ட வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன.  வியாழன் கிரகம் பூமியில் இருந்து 88.6 கோடி கிலோமீட்டர் தூரத்திலும், சனி கோள் 162 கோடி கிலோமீட்டர் தரத்திலும் தற்போது உள்ளன.

இவ்விரு கோள்களும் இங்கிருந்து ஒரே புள்ளியாக தோன்றினாலும், அவற்றுக்கு இடைப்பட்ட தூரம் 73 கோடி கிலோமீட்டர் ஆகும். சுமார் 397 ஆண்டுகள் சனி கோளும், வியாழன் கோளும் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும்., கடந்த 1623-ம் ஆண்டு அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று மிக நெருக்கத்தில் வந்தது நிகழ்ந்து உள்ளது.

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28-ந்தேதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியனின் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றைப் பார்க்க முடியவில்லை. தற்போது இந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி இதை நாம் காண இருக்கிறோம்.  இதன் பிறகு மீண்டும் வருகிற 2080-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதிதான் வர உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.